முயற்சி திருவினையாக்கும்
கண்ணப்பன் ஒரு நல்ல தொழிலாளி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்பவன். தற்போது அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அவன் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இவ்வாறு காலம் சென்று கொண்டிருக்கையில் அவன் வேலை செய்யும் துறையின் தலைவர் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். பொதுவாக இந்த மாதிரி அவசர கூட்டங்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் தான் கூட்டுவர்.
இன்று என்ன செய்தியோ என கண்ணப்பனும் அவனுடன் வேலை செய்யும் சக ஊழியர்களும் கூடி இருந்தனர். அவர்களது துறை தலைவர் எப்போதும் எதையும் சட்டென அதே சமயத்தில் தெளிவாகவும் கூறி விடுவார். அவர் உள்ளே நுழைந்ததும் ஆங்காங்கே பேசி கொண்டிருந்த அனைவரும் அமைதியாயினர். அவர் பேச ஆரம்பித்த உடனையே தான் வேறு துறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் , இந்த துறைக்கு வேறு ஒருவர் தலைவராக வருவார் எனவும் அறிவித்தார்.
யார் அந்த புதிய தலைவர் என அனைவரும் கேள்விக்குறியுடன் அவரை நோக்கினர். அவர்களது புதிய தலைவர் அவர்களில் ஒருவர் என்றும் அவர் பெயர் கண்ணப்பன் என்றும் அறிவித்தார் அனைவரும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர் . கண்ணப்பனுக்கோ தன்னை சுற்றி நடப்பது என்னவென்று புரியவில்லை, திடிரென்று வந்த இந்த செய்தியால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான் சிறிது நேரத்திற்கு பிறகே ஆசுவாசம் ஆனான்.
கண்ணப்பன் நல்ல தொழிலாளி தான் கொடுத்த வேலையை சரியாக செய்பவன் தான் என்றாலும் யாரிடமும் பேச , பழக கூச்சப்படுவான். இது இப்போது மட்டுமல்ல பள்ளி பருவத்திலிருந்தே அப்படித்தான். ஏனெனில் அவன் தேகம் மெலிந்து ஒல்லியாக காணப்பட்டான் ஆதலால் அனைவரும் அவனை கேலி செய்தனர் . இதன் காரணமாகவே அவன் சில விஷயங்களில் விலகியே இருப்பான். பள்ளி பருவம் ஆதலால் இந்த பிரச்சினை பெரிதாக பாதிக்கவில்லை.
அனால் துறை தலைவர் ஆனதில் இருந்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. ஏனெனில் எல்லா தொழிலார்களிடம் அன்புடன் பழகினால் தான் எளிதில் வேலை வாங்கவும், முடிக்கவும் முடியும். அவனது கூச்ச சுபாவத்தால் வேலைகள் சரிவர முடியாமல் தேங்கியது. மேலாளர்களிடம் திட்டு வாங்க நேர்ந்தது. அதன் காரணமாக தொழிலாளர்களிடம் எரிந்து விழுந்தான் இதனால் தொழிலாளர்களுக்கும் அவனுக்கும் இடையே மனஸ்தாபம் நேரிட்டது. இதனால் கண்ணப்பன் மனம் உடைந்தான். வேலையை கூட விட்டு விட நினைத்தான்.
மனம் உடைந்த நிலையில் புத்தகங்கள் படிப்பது அவனது வாடிக்கை தற்போதைய சூழ்நிலையும் அவ்வாறு இருக்கவே ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினான். அதில் இருந்த ஒரு வாக்கியம் தற்போது அவன் இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளிவருவதற்கான வழியை கண் முன்னே காட்டியது. அவ்வாக்கியம் என்னவெனில் "போர்க்களத்தில் நல்ல தற்காப்பு யாதெனில் எதிர்த்து நிற்பது தான்". இவ்வாக்கியம் போர்க்களத்தில் இருக்கும் வீரனுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். தற்போது கண்ணப்பனின் சூழ்நிலையும் அதுதான். இதனால் மனதளவில் புது தெம்பு மற்றும் புத்துணர்ச்சி பெற்றான். மறுநாள் அலுவலகத்தில் அவசர கூட்டம் ஒன்றை கூட்டினான். அவன் பேசிய முதல் வார்த்தையே அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என்பது தான். ஏனெனில் தனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக நிகழ்ந்து விட்ட தவறுகளுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கோரினான் மேலும் வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாது என்று உறுதி கொடுத்தான் நம்பிக்கையாக.
கண்ணப்பனின் இந்த பேச்சு மற்றும் அவன் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கை தொழிலாளர்களுக்கு ஆச்சிரியமாகவும் அதே சமயத்தில் அவன் மீது மரியாதையையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு வந்த அணைத்து பிரச்சினைகளையும் நம்பிக்கையுடன் எதிர் கொண்டு தீர்வு கண்டான். ஏற்கனவே இருந்த தவறுகளையும் சரி செய்தான். தொழிலாளர்களிடமும் அன்பாக பழக கற்றுக்கொண்டான். தன் துறை மட்டுமல்லாது வேறு துறை தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களிடமும் பழகி நற்பெயர் பெற்றான்.
சிறிது காலத்திற்குள்ளாகவே அந்த நிறுவனத்தில் தன் துறையை சிறந்த துறையாக மாற்றிக் காட்டினான். இதனால் அவன் தலைமையின் கீழ் பணியாற்ற பலரும் விருப்பம் கொண்டனர். இவைகளை தன் சக துறை தலைவர்கள் சொல்லக் கேட்டு பெருமிதம் கொண்டான். " முயற்சி திருவினையாக்கும் " என்பதை கண்கூடாக உணர்ந்தான்.
0 Comments: